சென்னை: சென்னை – அரக்கோணம் இடையே இன்று முதல் 12ம் தேதி வரை புறநகர் ரயில் சேவைகள் இயங்காது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் ரயில் நிலைய யார்டில் பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 8 (இன்று) முதல் ஜூன் 12ம் தேதி வரை 5 நாட்களுக்குப் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 4 மற்றும் காலை 5 மணி ரயில்கள், திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கு இரவு 9.15 மற்றும் இரவு 11.10 மணி ரயில்கள், திருத்தணியில் இருந்து சென்னை மூர் மார்க்கெட்டிற்கு காலை 6.30 மணி ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், சென்னை கடற்கரை மற்றும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தப்படும். இவை திருவாலங்காடு – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, காலை நேரங்களில் 4.05 (கடற்கரை), 6.20 (ஆவடி), 6.30, 9.10, 10.30 (பாஸ்ட்), 11 மணி, மதிய நேரங்களில் 12.40, 1.25, 2.25, மாலை நேரங்களில் 3.45, 4.45, 5.15, 5.45, 6.05, 6.15 (கடற்கரை), 6.40 மணி, இரவு நேரங்களில் 7.30 (பாஸ்ட்), 8.20 (பாஸ்ட்), 9.10, 10, 10.55 மணிக்கு அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தப்படும். இவை அரக்கோணம் வரை இயக்கப்படாது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை மூர் மார்க்கெட் மற்றும் கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்படாது. இவை திருவாலங்காட்டிலிருந்து வழக்கமான நேரத்தில் சென்னை நோக்கிப் புறப்படும்: அதன்படி, காலை நேரங்களில் 3.45, 4.25, 5.25, 6.20 (கடற்கரை), 6.40 (பாஸ்ட்), 6.50 (கடற்கரை), 7.35 (பாஸ்ட்), 8.15, 8.55, 11.15 மணி, மதியம் / மாலை நேரங்களில் 2.25, 3.40, 4.15 (கடற்கரை), 4.50, 6 மணி, இரவு நேரங்கள் 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் திருவாலங்காட்டிலிருந்து புறப்படும்.
திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்னை மூர் மார்க்கெட் புறப்படும் ரயில், திருத்தணி முதல் திருவாலங்காடு வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருவாலங்காட்டிலிருந்து சென்னைக்கு இயங்கும் காலை 6.30 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக காலை 6.20 மணிக்கு திருத்தணியில் இருந்து சென்னை மூர் மார்க்கெட்டிற்கு ஒரு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
