பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்பி லலித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனிப்படை போலீஸாரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீஸார் பாடாலூரில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸார், மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட, பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் உமேஷ் (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தவெக பிரமுகர் ஆவார்.
விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தினகரன் இணையதள பக்கத்தில் செய்திகள் வெளியானது. இதையடுத்து இன்று மாலை தவெக தலைமை அலுவலகம், உமேஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருநது நீக்கி உத்தரவிட்டுள்ளது.
