போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலைதான் இந்த ஆட்சியில் பதிலா, இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை: போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? என்று எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப்படுகிறார். இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணிபுரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.

காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார். சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம். கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழக பெண்களின் பாதுகாப்பை காம்ப்ரமைஸ் செய்தீர்களா?

நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழக பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா? ‘ஆட்சி நடத்துவது எப்படி’ என நீங்கள் ஆறு மாத Crash Course (விரைவு பயிற்சி) முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சி தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை.

தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சி தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களை காக்கும்?

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்? தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாய பணியான சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்பை எடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: