குன்னம்: திமுகவினரும், விசிகவினரும் சமூக வலை தலங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில் இரு தரப்பும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கடைவீதியில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். இதற்கு போலீஸ் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. கற்கள், கட்டைகளை வீசி தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் திமுகவை சேர்ந்த முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் புகழேந்தி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் குன்னம் ரமேஷ் உள்பட திமுகவினர் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் சம்மந்தமாக குன்னம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிபிரசாத் கொடுத்த புகாரின் பேரில் திமுக, விசிகவை சேர்ந்த 120 பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிந்துள்ளனர்.
