சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் 76 நாட்களில் வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்று தந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; விளாத்திகுளம் வேடநத்தம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் துணை நின்று, குற்றம் நடந்த 76 நாட்களில் இவ்வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, நீதியைப் பெற்றுதந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி.
குற்றவாளிக்கான தண்டனையை சட்டம் உறுதிசெய்துவிட்டது. இனி இதுபோல எந்தவொரு பெண்ணுக்கும் நடக்காதவாறு, கூட்டு மனசாட்சியோடு இயங்கும் இந்தச் சமூகம் தான் உறுதிசெய்யவேண்டும். அதற்கான வழிகளை அரசு தான் ஏற்படுத்தித் தரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
