நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று இரவு பெய்த மழையில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ராசிபுரம் 6வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் கார் சேதமடைந்தது. மேலும் அங்குள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தது.
சூறாவளி காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். நேற்று பலத்த காற்றுடன் 11 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. ராசிபுரத்தில் 4வது வார்டில் உள்ள வீடு ஒன்றின் சுவர் இடிந்து சித்ரா தேவி என்ற பெண் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அருகே நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தது. கடந்த 2 நாட்களாக வெயில் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மாலை காற்று வீசியதை தொடர்ந்து சுமார் 7 மணியளவில் மழை பெய்ததது. செட்டிகுளம் பகுதியில் 71 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் நேற்று பலத்த காற்று வீசியதால் பெரம்பலூர் அருகே உள்ள விராலிபட்டியில் ஏரளமான மரங்கள் சாய்ந்ததோடு மின்கம்பங்களும் சாய்ந்தது. இதனால் மின்சார துண்டிக்கபட்டு மக்கள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சேர்ந்து பணிகளில் ஈடுபட்டனர். மாட்டுக்கொட்டகைகள் மற்றும் ஒரு சில வீடுகளில் மேற்கூரையும் சேதமடைந்துள்ளது. இதற்கான இழப்பீடு வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த மழையின் காரணமாக எந்த ஒரு உயிர் சேதங்களும் மற்றும் பாதிப்புகளும் பெரியளவில் இல்லை.
