நெல்லை: சென்னையில் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட நெல்லையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாநகரில் தூய்மை பணியாளர் ஒருவரை அவரது மேற்பார்வையாளர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜேம்ஸ் (30). கணிப்பொறியியல் பட்டதாரியான இவர் பிரபல ஆப்பிள் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் இவர் வெளியிட்ட வீடியோவில் முதல்வர் விஜயையும் அவருக்கு வாக்களித்த மக்களையும் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆபாசமாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜேம்ஸ் ராஜா என்ற அவர்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் குறித்து ஏராளமான அவதூறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஜேம்ஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
