சென்னை: அரசு பேருந்தை இயக்கும் போது ஓட்டுனர்கள் மொபைல் வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகப்படுத்த கூடாது என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுனர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி வருவதாகவும் பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார் பெறப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஓட்டுனர்கள் பணியின் போது மொபைல் பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது உயிரிழப்பு மற்றும் பெரிய விபத்துகள் ஏற்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஓட்டுனர்கள் பணியின் போது மொபைல் சட்டைப்பையில் வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
மேலும் பேருந்து நிலையம் மற்றும் வழித்தட ஆய்வின் போது ஓட்டுனர்கள் மொபைல் வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டால் ஓட்டுநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு சுற்றறிக்கையின் வாயிலாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
