சென்னை: தமிழக வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; விளையாட்டுத் துறை அமைச்சர் என்பதை விட, அடிப்படையில் இந்த நேரு ஸ்டேடியத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் விளையாட்டு வீரராக இருந்தவன் நான்.
அதனால் இதுதான் என்னுடைய வீடு. அந்தவகையில் இன்று காலை அதிகாரிகளுடன் இங்க இருக்கக்கூடிய வசிதிகள், விடுதியில் உள்ள வசதிகள், வீரர்களின் உணவு, பயிற்சி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தேவைகள் குறித்தெல்லாம் ஆய்வு செய்து கேட்டறிந்தோம். கல்வித்துறை எந்த அளவுக்கு முக்கியமோ, விளையாட்டுத் துறையும் அதுக்கு சரிசமமாகப் பார்க்கப்படணும்.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் 10 வயதில் இருந்தே ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார் படுத்துவார்கள். ஆனால், நமது வீரர்கள் பள்ளி மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தான் கவனம் செலுத்திகிறோம். கண்டிப்பாக 8 வயதில் இருந்தே ஒலிம்பிக் பதக்கம் வெல்லக்கூடிய ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
தேசிய அளவிலான போட்டிகளை நிறைய நடத்த வேண்டும். விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும் சர்வதேச தரத்திலான மைதானங்கள் இருக்கவேண்டும். 25,000 – 30,000 பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய மைதாங்கள் அமைக்கவேண்டும். கண்டிப்பாக, முதல்வரிடம் கலந்துரையாடிவிட்டு அடுத்தடுத்த வேலைகளை வேகமாக முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
