அமைச்சர்கள், வாரிய தலைவர் பதவிக்கு மயங்கி முன்னாள் அமைச்சர்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவு பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை ஒன்றிணைந்து முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

 

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை நிர்வாகிகளும் ஒன்றிணைந்து முறியடிப்போம். 53 இடங்களில் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்ற ஒருசில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டு அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி பெற வேண்டும் என்ற பேராசையுடன் கொறாடாவின் உத்தரவிற்கு மாறாக, ஆளும் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களது இந்தச் செயல் கழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும். நான் முதலமைச்சராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய போது, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எந்த நேரத்தில் என்னைப் பார்க்க வந்தாலும் அவர்களை சந்தித்து வந்தது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

தேர்தலில் சிறப்பான கூட்டணியை அமைத்தோம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தேன். எடப்பாடி தொகுதியில், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது, என்னைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்வது மிகவும் வேதனைக்குரியதும், கண்டிக்கத்தக்கதுமாகும். ஒருசில முன்னாள் அமைச்சர்களிடம், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும், எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் நல்லாட்சி அமைந்திட அரும் பணியாற்றுவோம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அதிமுக மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: