கடலோர காவல் படையில் விரைவு ரோந்து கப்பல் அச்சல் சேர்க்கப்பட்டது

 

புதுடெல்லி: கடலோர காவல்படைக்காக கோவா ஷிப்யார்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் 8 அதிவேக ரோந்து கப்பல்களில் 5வது கப்பல் ‘அச்சல்’. புதிய தலைமுறை ஆதம்யா வகை அதிவேக ரோந்து கப்பலான இது கடலோர காவல்படையில் நேற்று முறைப்படி சேர்க்கப்பட்டது. இதற்கான விழாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் கொள்முதல் தலைமை இயக்குநர் ஏ.அன்பரசு, கடலோர காவல்படை மண்டலத்தின் தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டெக்கூர் சசிகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கப்பல் குஜராத்தின் வதினாரில் நிலைநிறுத்தப்பட்டு, கிழக்கு கடல் எல்லயை பாதுகாப்பதில் கடலோர காவல் படையின் பங்கை வலுப்படுத்தும். இந்த கப்பல், கண்காணிப்பு, இடைமறிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்ளும். 51 மீட்டர் நீளமும், 320 டன் எடையும் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 27 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு பொருட்களை கொண்டு இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

Related Stories: