லக்னோ: இந்தியாவில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அகிலேஷ்யாதவ் வலியுறுத்தி உள்ளார். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு மேற்குவங்க தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ்யாதவ் நேற்று லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேற்று முன்தினம் மிகவும் வளர்ந்த நாடான இங்கிலாந்து நாட்டில் தேர்தல் நடைபெற்றது.
அங்கு ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்குப்பதிவு நடந்தது. இங்கிலாந்து நாடு முழுவதும் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களித்தது. நாம் இங்கிலாந்தை விட முன்னிலையில் இருக்கிறோமா? இந்தக் கோரிக்கை புதியதல்ல; இது எப்போதுமே சோசலிஸ்டுகளின் ஒரு கோரிக்கையாக இருந்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் வாக்குச்சீட்டு மூலம் வாக்களித்த நிலையில், நாமும் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது அவசியம் என்று நம்புகிறோம். நீங்கள் (பாஜ) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி எங்களைத் தோற்கடித்தீர்கள். நாங்கள் உங்களை மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தித் தோற்கடித்து, பின்னர் உங்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம்.
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது, வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாஜ சதி செய்தது. பலர் வாக்குச் சாவடிகளுக்கு வந்தபோது, தங்களது வாக்குகள் காணாமல் போனதையோ அல்லது வேறு வாக்குச் சாவடிகளுக்கு மாற்றப்பட்டதையோ கண்டறிந்தனர். இது வாக்குகள் முறைகேடாகப் பதிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.
சமாஜ்வாடி கட்சி, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பிரமாணப் பத்திரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் குற்றவாளிகளான எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வாக்காளர் பெயர் நீக்கும் செயல்முறையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், எஸ்ஐஆர் முறை செயல்படுத்தப்பட்டது.
மக்கள் துன்புறுத்தப்பட்டனர். எஸ்ஐஆர் அறிக்கைக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் அதிக எண்ணிக்கையிலான இரட்டை மற்றும் மும்மடங்கு வாக்குகள் இருந்தன. சில இடங்களில், இறந்தவர்களுக்கும் கூட வாக்குகள் இருந்தன. சமாஜ்வாடி கட்சி மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலைத் தானாகவே சரிபார்த்து வருகிறது. தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு தொழில்நுட்பத் தகவல்களையும் பயிற்சியையும் வழங்கவில்லை. இதில் அப்பட்டமான நேர்மையின்மை வெளிப்பட்டது.
பாஜ கட்சியினர் வாக்குகளையும் உரிமைகளையும் திருடி வருகின்றனர். இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரவிருக்கும் 2027 உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் நாம் ஒரு பல அடுக்குத் தேர்தல் மாபியா கும்பலுக்கு எதிராகப் போராட வேண்டும். ஜனநாயகம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் காக்க உறுதியுடன் இருப்போர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* காங்கிரஸ் கூட்டணி முறிவா?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு விஜய் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் அகிலேஷ்யாதவ் தனது எக்ஸ் தளத்தில் மம்தா, மு.க.ஸ்டாலின் படங்களை பதிவு செய்தார். இதனால் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணி முறிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. இதுபற்றி பேசிய அகிலேஷ்யாவ்,’அப்படிச் சொன்னது யார்? பாஜவின் நிலை என்ன? அவர்களிடம் மக்களுக்குக் காட்டுவதற்கு எந்த உருப்படியான பணியும் இல்லை. அவர்கள் எதிர்மறைச் செய்திகளையும் பிளவுபடுத்தும் கருத்துகளையும் மட்டுமே பரப்புகிறார்கள்.
இவர்கள்தான் மோதல்களை உருவாக்கி, மறைமுகமாகச் செயல்படும் சங்கி சகாக்களின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர். தேர்தல்களில் பாஜ செலவிடும் அளவுக்கு வேறு யாராலும் பணம் செலவழிக்க முடியாது; அது ஒரு கும்பலைப் போலவே செயல்படுகிறது. இறுதியில் மக்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். இம்முறை, மக்களே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்’ என்றார்.
