சண்டிகர்: பஞ்சாப் மாநில மின்சாரத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா மற்றும் அவருடன் தொடர்புடைய சிலரின் இடங்களில் இன்று(09-05-2026) அமலாக்கத்துறை (ED) சோதனைகளைத் தொடங்கிய சில மணி நேரங்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாகக் கண்டித்துள்ளார். 62 வயதான அரோரா, லூதியானா மேற்கு சட்டமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
அதிகாரிகள் கூறுகையில்; 2002 ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், அரோரா மற்றும் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய நான்கு இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியது. சண்டிகர் மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதியில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. சண்டிகரின் செக்டர் 2-ல் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு அரோரா மீது சோதனை நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்த மாத தொடக்கத்திலும், ஏப்ரல் மாதத்திலும் அவருக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சோதனைகள் தொடர்பாக பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாகச் சாடிய கெஜ்ரிவால், அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார், பஞ்சாப் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார்.
