திண்டுக்கல்: விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை அடுத்து திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் அதிக இடங்களை பிடித்துள்ளன. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவையுள்ள நிலையில், விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அதில் ஒன்றை ராஜினாமா செய்யும் நிலையில், 107 சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இன்னும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவையுள்ள நிலையில் விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக பேசி வருகின்றது. இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை இல்லாமல் தவெக திணறி வருகிறது. இந்த நிலையில், விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்லைச் சேர்ந்த சரண்யா (25), வளர்மதி (26) ஆகியோர் கல்லறை மேடு பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘ஜனநாயக முறைப்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
