யஷ்வந்த்பூர் – ஓசூர் வரையில் இயக்கப்பட்டு வரும் MEMU ரயில் பெரிய நாக துணை வரை நீட்டிப்பு

 

சென்னை: யஷ்வந்த்பூர் ஓசூர் வரையில் இயக்கப்பட்டு வரும் MEMU ரயில் பெரிய நாக துணை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் முதல் தமிழக மாநிலம் ஓசூர் வரையில் இயக்கப்பட்டு வரும் MEMU ரயிலை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரிய நாக துணை வரையில் நீட்டிக்க வேண்டும் என அந்த பகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வரப்பெற்றது. அதுபோலவே குண்டூர்-திருப்பதி வரையிலான விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் என பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

பொதுமக்களின் இந்த கோரிக்கைகளை, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்திருந்தேன். இந்த கோரிக்கைகளை ஏற்று இரு ரயில்களையும் நீட்டித்து இன்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் தமிழக குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பயணங்கள் வசதியாக அமைவதுடன், அந்த பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகோலும். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று ரயில்களை நீட்டித்துள்ள பிரதமர் மோடியும், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரும், தமிழக மக்கள் சார்பாக எனது அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: