மதுபோதை தகராறில் விபரீதம் தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளி கொலை: வாலிபர் கைது

சோழிங்கநல்லூர்: திருவொற்றியூரில் தொழிலாளியின் தலையில் பாறாங்கல்லை போட்டு கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் ஒன்றிய குப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (35), கூலி தொழிலாளி. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கடற்கரையில் சீனிவாசன் தனது நண்பரான ஆனந்தன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர் மதுபோதையில் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், ஆகாஷை தாக்கியுள்ளார். தொடர்ந்து, சீனிவாசன் தனது வீட்டின் அருகே உள்ள கோயில் வாசலில் மது அருந்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆகாஷ், பெரிய பாறாங்கல்லை தூக்கி வந்து சீனிவாசனின் தலையில் போட்டுள்ளார். இதில், சீனிவாசன் அலறித்துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஆகாஷை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருவொற்றியூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த ஆகாஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து ஆகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: