சென்னை: கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் திமுக மாணவர் அணி சார்பில் உதவி மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி 21ம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 படித்து முடித்து கல்லூரிகளில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் திமுகவில் உதவி அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், 2026-27ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் முதலாமாண்டு சேரவிருக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், திமுக மாணவர் அணியின் சார்பில் உருவாக்கப்பட்ட “TSC-HELP DESK’’ ஐ தொடங்கி வைத்தார்.
அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, மாணவர் அணிச் செயலாளர் வீரமணி, துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், வி.ஜி.கோகுல், மாவட்ட அமைப்பாளர்கள் சென்னை தென்மேற்கு விஜய், சரவணன், சத்யா மற்றும் 50க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் உடனிருந்தனர்.
