நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சேலத்தில் எடப்பாடியுடன் மாஜி அமைச்சர்கள் சந்திப்பு

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்தது. தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கடந்த 29ம் தேதி வெளியானது. இதில், திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 23ம் தேதி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் வாக்களித்தார்.

அதன் பிறகு சென்னை சென்ற அவர், கடந்த 30ம் தேதி சேலம் வந்தார். நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கி உள்ள அவரை கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். நேற்று முன்தினம் தம்பிதுரை எம்பி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர்.

தொடர்ந்து நேற்று புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு, வெற்றி வாய்ப்புகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கே.பி.முனுசாமி மட்டும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் இந்த சந்திப்புஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: