ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ரூ.1.13 கோடி ஹவாலா பணம் பறிமுதல்?.. 3 பேர் பிடிபட்டனர்

 

புழல், ஆக.3: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது ஹவாலா பணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள சோதனைச் சாவடியில், ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் சோதனை நடத்திய பின் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து வந்த கொரியர் நிறுவனத்தின் பார்சல்களை ஏற்றி வந்த லாரி ஒன்றை போலீசார் நேற்று காலை வழிமறித்து சோதனை நடத்தினர்.

அப்போது 3 பைகளில் ரூ.1.13 கோடி பணம் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் ஆந்திராவை சேர்ந்த பிரவீன் (36), பவுன்குமார் (28), லாரி ஓட்டுநர் ராம்பாபு (40) ஆகிய மூவரை பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அப்போது நடத்திய விசாரணையில், விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த பார்சல் லாரியில் பிரவீன், பவுன்குமார் ஆகிய இருவர் லிப்ட் கேட்டு வந்ததாகவும், சென்னையில் தங்க நகை வாங்குவதற்காக ரூ.1.13 கோடி பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் ஹவாலா பணமா என தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிடிபட்டவர்களை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.

 

Related Stories: