மது போதை தகராறில் ஸ்டீல் கம்பெனி ஊழியர் சரமாரி அடித்து கொலை: சக ஊழியர்கள் 2 பேர் கைது

 

பெரம்பூர், ஆக.4: மணலி ராமர் 4வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் பாபு (45). இவர், கொடுங்கையூர் சின்னாண்டி மடம் கடும்பாடி அம்மன் கோயில் 2வது தெருவில் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். அதன் அருகில் ஒரு வீட்டில், கம்பெனியில் வேலை செய்பவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கம்பெனியில் பணிபுரியும் வண்ணாரப்பேட்டை சிமென்ட் ரோடு பகுதியை சேர்ந்த அனுராஜ் (54), ஓட்டேரி டோபிகானா ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்த தளபதி (60), பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் போஸ்ட் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (43) ஆகியோர், 2வது மாடியில் மது அருந்தி உள்ளனர். அப்போது, போதையில் ஏற்பட்ட தகராறில் அனுராஜ், தளபதியை அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தளபதி மற்றும் விஜயகுமார் அங்கிருந்த கட்டை மற்றும் செங்கல்லால் அனுராஜை அடித்துள்ளனர். இதில் அனுராஜிக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, தளபதியும், விஜயகுமாரும் அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று காலை 11 மணியளவில் தனது ஸ்டீல் கம்பெனிக்கு வந்த உரிமையாளர் கணேஷ் பாபு, அனுராஜை தேடி உள்ளார். அப்போது அவர் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார், உயிரிழந்த அனுராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தனிப்படை அமைத்து, தப்பித்து ஓடிய தளபதி, விஜயகுமார் ஆகிய இருவரை கைது செய்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உயிரிழந்த அனுராஜிக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் திருவொறறியூர் பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: