சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சு நடத்துவது தமிழக உரிமையை கர்நாடகத்திடம் தாரை வார்ப்பதற்கு சமமாகும் என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3ம்தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், கர்நாடகம் செல்லவிருப்பதாகவும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார்.
மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3ம்தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? ஒன்றிய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதல்வர் விஜய்க்கு, கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத் தான் முதல்வர் விஜய், அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு.
மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால், அதை இரு தரப்பு பிரச்னையாக ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக் கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்? அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது தான் தீர்வாக இருக்கும்.
இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும். மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.
மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும். மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
