சென்னை: தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் வெற்றி பெற்றிருந்தார். 108 தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது. இந்த சூழலில் கடந்த மே 8ம் தேதி இரவு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து, எங்கள் கட்சி எம்எல்ஏவை காணவில்லை என புகார் அளித்தார்.
எம்எல்ஏ காணாமல் போனதற்கு குதிரை பேரமாக இருக்கலாம். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கடிதம் வழங்கினார். காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்நிலையில், மே 9ம் தேதி டி.டி.வி.தினகரனோடு செய்தியாளர்களை சந்தித்த காமராஜ், செல்போனை வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்னை கிளம்பியதால், என்னை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், நான் எங்கேயும் காணாமல் போகவில்லை எனவும் தெரிவித்தார்.
மே 13ம் தேதி தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இந்த சூழலில், கட்சி விதிகளை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக சார்பில் பொருளாளர் கரிகாலன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சி தலைவர் டி.டி.வி.தினகரனின் அறிவுறுத்தலுக்கு மாறாக தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம். சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தை மீறும்போது சம்பந்தப்பட்டவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கலாம்.
அதன் அடிப்படையில் தான் இன்று புகார் அளித்துள்ளோம். இந்த புகார் குறித்து பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினரை கட்சியை விட்டு நீக்கியது ஒழுங்கு நடவடிக்கைதான் தவிர மற்றபடி நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வாக்களித்தது தவறு. அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு இருந்தாலும் எங்களுடைய சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த அடிப்படையில்தான் நாங்கள் புகார் அளித்துள்ளோம் என்றார்.
