குதிரை பேரம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி கடந்த 8ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இதன்படி, செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் என்.பரணிகுமாருடன் வந்து நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு சரணடைந்டார். பின்னர் முன் ஜாமீனுக்கான பிணையை செலுத்தினார்.

பிணையை ஏற்று கொண்ட நீதிபதி, தினமும் காலை 10.30மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி போலீஸ் முன் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டார். அவரது சகோதரர் அசோக்குமார், வேறொரு வழக்கு தொடர்பாக கரூரில் ஆஜராக உள்ளதால் அவர் திங்கள் கிழமை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்து பிணை செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.

Related Stories: