சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் மணியம் மற்றும் வடபழனி கோயில் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து சமயபுரம் மற்றும் வடபழனி கோயில்களில் பணியாற்றி வந்த இரண்டு அலுவலர்கள் மீது ஊழல் மற்றும் நிர்வாக ஒழுங்கின்மை புகார்களின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நிர்வாகப் பணிகளையும் கருவூலத்தையும் கவனித்து வந்த மணியம் பழனிவேல் என்பவர் மீது, வரம்பிற்கு மீறி அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தச் சொத்துக் குவிப்புப் புகாரின் கீழ் ஊழல் தடுப்பு விசாரணை நடைபெற்று வருவதால், அதன் அடிப்படையில் அவர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், சென்னை வடபழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது கோயிலில் பல்வேறு நிர்வாக ஒழுங்கின்மைகள் மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, அங்கு இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஹரிகோவிந்த் என்பவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
