தேனி மாவட்டம், சின்னமனூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவின் ஆதரவாளர்கள், விஜய் திரைப்படம் வெளியாவதையொட்டி பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற பணிகளில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது, தவெக கட்சிக்கொடி கட்டிய கார் ஒன்று அந்த கூட்டத்திற்குள் நுழைந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய சிலர், எம்எல்ஏ ஆதரவாளர்களை கொடூரமாக தாக்கினர்.
இதில், மூன்று பேருக்கு கை உடைந்தது. மேலும், அவர்கள் அங்கிருந்த ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ காரையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பினர். இதையடுத்து எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் அவரது ஆதரவாளர்கள், சின்னமனூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அப்போது‘தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டியின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உடனடியாக தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டியை கைது செய்ய வேண்டும்’ என கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே எம்எல்ஏ ஆதவாளர்கள் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, சின்னமனூர் காவல் நிலையத்தை நேற்றும் எம்எல்ஏ ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டிக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
