திருப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரஞ்சனி (23). இவர், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். நல்லூர் அடுத்துள்ள நல்லிகவுண்டன் பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சனி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ரஞ்சனி ஆயுதப்படையில் நடக்கும் வருகை அணிவகுப்பில் கலந்து கொண்டார். அதன்பின், ரஞ்சனியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், ரஞ்சனியை கடுமையாக தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த ரஞ்சனி அங்கிருந்து வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
