சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே கடுமையான அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்குகின்றன. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறை, சட்டத்திற்கு மேலான அமைப்பாக ஒருபோதும் செயல்பட முடியாது.
அருணாசலம் உயிரிழப்பு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை உள்ளிட்ட உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த அருணாசலத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
