ராயக்கோட்டை, ஜூலை 17: பருவமழை பொய்த்ததால், ராயக்கோட்டையில் உள்ள ஒடையாண்டஅள்ளி ஏரி வறண்டு காய்ந்து காணப்படுகிறது. இதனால், வேளாண் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக, கோடையை போல கடும் வெயில் வாட்டி வருகிறது. வெயிலால் ஏரி, குளம் மற்றும் குட்டை, ஆறுகள் நீரின்றி வறண்டு வருகின்றன. பருவமழை பொய்த்த நிலையில், ராயக்கோட்டை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் சூளகிரி பகுதிகளில், பயிர்களுக்கு தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பூக்கள் சாகுபடிக்கு பிரதானமாக விளங்கும் ராயக்கோட்டை ஊராட்சி, ஒடையாண்டஅள்ளி ஏரியில் எப்போதும் தண்ணீர் நிரம்பி காணப்படும்.
ஆனால், பருவமழை பொய்த்த நிலையில், ஒடையாண்ட அள்ளி ஏரி தற்போது வறண்டு காட்சியளிக்கிறது. இந்த ஏரியில் இருந்து, 4 வழிச்சாலை அமைக்க மண் எடுத்ததால் ஏரி அகலமாகவும், ஆழமாகவும் பரந்து, விரிந்து காட்சியளிக்கிறது. இப்போது, மழை பெய்தாலும் ஏரி நிரம்பினால், ஏரளமான விளைநிலங்கள் பாசன வசதி பெறும். 2 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியும். ஆனால் மழை பெய்யாததால், விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல, சின்னகவுண்டன் ஏரி, உல்லட்டி ஏரிகள் நீரின்றி வறண்டு காய்ந்து காணப்படுகின்றன. இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
