ராயக்கோட்டை, ஜூலை 18: ராயக்கோட்டை பகுதியில் கடும் வெயில் சுட்டெரிப்பதால், நாற்று பண்ணைகளிலுள்ள நாற்றுகளுக்கு தினமும் 2 முறை தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் நூற்றுக்கணக்கான நாற்று பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் சாமந்தி ரகங்களில் மஞ்சள், செண்டு மஞ்சள், வெள்ளை மற்றும் வயலட் சாமந்தி, செண்டுமல்லி நாற்றுகள், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய்களில் நாட்டு பச்சை மிளகாய் மற்றும் புல்லட் பச்சை மிளகாய் நாற்றுகள் போன்றவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு தரமான நாற்றுகள் கிடைப்பதால், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வந்து நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர்.
நாற்று பண்ணைகளை வைத்திருப்பவர்கள் காலி நிலங்களை வாடகைக்கு எடுத்து, அதில் பண்ணைகளை அமைத்து நாற்றுகளை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். நாற்றுகளை வளர்க்க தண்ணீர் அதிகளவில் தேவைப்படுகிறது. வாடகை நிலத்தில் போர்வெல் அமைக்க வாய்ப்பில்லாததால், தண்ணீர் தொட்டி அமைத்து அதில் காசு கொடுத்து தண்ணீரை வாங்கி நிரப்பி நாற்றுகளுக்கு பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில், சமீப நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாற்றுகள் கருகி விடாமல் இருக்க தினந்தோறும் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர். சில நாட்களில் 2 முறை கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டி இருப்பதாக கூறுகின்றனர்.
