ராயக்கோட்டை, ஜூலை 20: கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சேலம்- ஓசூர் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 4 வழி சாலை பணிகள், கடந்த 2021ம் ஆண்டு பணிகள் துவங்கியது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர் ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால், ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இதனால், வயதானவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை தொடர்ந்து சந்தித்து வந்தனர். ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலை பணிகள் முடிந்த நிலையில், மேம்பாலம் கட்டும் பணிகள் மந்த கதியில் நடந்து வந்தது. அதனால், கன்னியாகுமரி முதல் வட மாநிலங்கள் வரை செல்லும் அனைத்து வாகனங்களும் ஆயிரக்கணக்கில் ராயக்கோட்டை நகரில் நுழைந்து சென்றன.
போக்குவரத்து நெரிசலினால் ராயக்கோட்டை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து வந்தது. இது குறித்து தினகரனில் செய்திகள் வந்த வண்ணமிருந்தது. மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து, வாகனங்களை 4 வழிச்சாலையில் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், 4 வழிச்சாலையில் பாலம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மாலையிலிருந்து வாகனங்கள் மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், ராயக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
