வேலூர், ஜூலை 15: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் அடுத்த விருப்பாச்சிபுரம், பாகாயம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணி அளவில் மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்து 104.7 டிகிரியாக பதிவானது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்களுக்கு இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புழுக்கத்தில் சிரமமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விருப்பாச்சிபுரம் பகுதிபொதுமக்கள் விருபாட்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மிகவும் அவதிப்படுவதாகவும் மின் அதிகாரிகள் வந்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏஎஸ்பி தனுஷ் குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது.
உடனே மறியலில் ஈடுபட்டவர்கள் கத்தி கூச்சலிட்டனர். நேற்று முன்தினமும் இரவு 10க்கும் மேற்பட்ட முறை மின் விநியோகம் தடைபட்டது. தொடர்ந்து 2வது நாளாக நேற்று மின்விநியோகம் துண்டிக்கப்பட்து என கூறிய பொதுமக்கள் ஏஎஸ்பி தனுஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்குவந்த மின்வாரிய அதிகாரி ஆராக்கிய அர்புதராஜ், எம்எல்ஏ வினோத் கண்ணனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
