எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக நியமனம்; 54 இளநிலை உதவியாளர்கள் உடனடியாக பணிநீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்கள் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணியிடங்களுக்காக 654 பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து 54 நபர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட நியமனங்களை ரத்து செய்யக்கோரி கருணை அடிப்படையில் 2016ம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி, கனக மணி, கவுசல்யா, ரஞ்சித்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தேர்வு நடைமுறைகளில் மனுதாரர் பங்கேற்காத நிலையில், பணி நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடர அவருக்கு தகுதி இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து மேற்கண்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈஸ்வரி, உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றம் டிவிசன் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு நீதிபதிகள், ‘‘கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, முறைகேடான நியமனங்களுக்கு காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு உத்தரவுக்கு எதிராக நிவேதா, சக்தி கவிதா, வினோத் குமார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மற்றும் வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் தாக்கல் செய்திருந்த கேவியட் மனு ஆகிய அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பாலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து மனுவை விரிவாக பரிசீலனை செய்த நீதிபதிகள்,”இளநிலை உதவியாளர்கள் பணிக்கு 654 விண்ணப்பங்களில் 440 விண்ணப்பதை ஏற்று அதன் பின்னர் 54 விண்ணப்பங்களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணைகளை எவ்வாறு வழங்கினீர்கள்? உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் எங்களுக்கே தினசரி பட்டியலிடப்படும் சுமார் 65 வழக்குகளை முழுமையாக ஆய்வு செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது 654 விண்ணப்பங்களை பெற்றுகொண்டு அதில் 440 விண்ணப்பங்களை ஒரே இரவில் எவ்வாறு பரிசீலனை செய்திருக்க முடியும். சாத்தியமே கிடையாது. ஒரு தேனீர் குடிக்க கூட நீங்கள் எழுந்து போகவில்லையா?. மேலும் விண்ணப்பங்கள் வரவேற்பதற்கு ஈ-பேப்பரில் மட்டுமே விளம்பரம் பிரசூரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன.

குறிப்பாக 54 பேர் எந்த தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் எங்கே என்று சரமாரி கேள்வியெழுப்பினர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”கடந்த 2021ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதமான செயல்கள் நடந்துள்ளது. குறிப்பாக விதிமுறைகள் மீறல் இருப்பது தெளிவாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதனால் சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட 54 பணியிடங்கள் கொண்ட அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டனர்.

Related Stories: