திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு), வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 4 நாட்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடப்பது வழக்கம். அதன்படி கோயிலில் வரும் 17ம்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெற்றது. காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
மூலவர் ஏழுமலையான் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாதா, பாஷ்யகார்ல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. இதில் கோயில் ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
