கோவில்பட்டி, ஜூலை 14: தென்மாவட்ட அளவில் பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டியில் இலுப்பையூர் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவியருக்கான தென்மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள், பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. விருதுநகர் மாவட்டம் இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிக். பள்ளி, ராமநாயக்கன்பட்டி ஆர்.யூ.கே.என்.எம்.எஸ்.பி. நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லை மாவட்டம் கூட்டாம்புளி குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் ‘ஏ’ மற்றும் ‘பி’ அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதிப்போட்டியில் இலுப்பையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2 கோல்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்தது. ராமநாயக்கன்பட்டி ஆர்.யூ.கே.என்.எம்.எஸ்.பி. நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி ஒரு கோல் அடித்து 2வது இடத்தையும், அம்பை பள்ளி அணி 3வது இடத்தையும், கூட்டாம்புளி பள்ளி அணி 4வது இடத்தையும் பெற்றன. போட்டியை நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சாமிராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கோவில்பட்டி கால்பந்து கழக செயலாளர் தேன்ராஜா தலைமை வகித்தார். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். கோவில்பட்டி கால்பந்து கழக பயிற்சியாளர் கனகவல்லி முன்னிலை வகித்தார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கோப்பைகளை நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினராஜ் வழங்கினார். சிறப்புப் பரிசுகளை தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணைத் தலைவர்கள் ராஜா, உடன்குடி ராஜேஷ் வழங்கினர். போட்டிகளுக்கு நடுவர்களாக செல்வம், முத்துராஜா ஆகியோர் செயல்பட்டனர். கோவில்பட்டி கால்பந்து கழக உறுப்பினர் சுபாஷ் ராஜா நன்றி கூறினார்.
