தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு

சென்னை: தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த வருண்குமார் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன் சென்னை சிபிசிஐடி டிஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி ரகுபதி தாம்பரம் மாநகர பள்ளிக்கரணை துணை கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இவர்களில் டிஐஜி வருண்குமார், திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரணை நடத்தி வந்தவர். ஓரளவு குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரை மாற்றி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் முதல் எஸ்பி ஜோஸ் தங்கையா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வரை உள்ள அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிட்டனர்.

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி சரக டிஐஜி பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த மத்திய மண்டல ஐஜி நிர்மல்குமார் ஜோஷி மட்டும் சேலம் கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது ராமஜெயம் கொலை வழக்கை விசாரணை நடத்தி வந்த அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ராமஜெயம் வழக்கு மீண்டும் முடக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: