புதுடெல்லி: இ-ரிக் ஷாக்களை ஓடும்போதே முடக்கும் ஆபத்தான 3 சீன செயலிகளை ப்ளேஸ்டோரிலிருந்து நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இ-ரிக் ஷாக்களை மொபைல் ஆப் மூலமாக தொலைதூரத்திலிருந்தே இயக்கி, அவற்றின் ஓடும் வேகத்தை குறைக்கவும், நடு வழியில் நிறுத்தவும் கூடிய புதிய மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ப்ளூடூத் தொழில்நுட்பம் வாயிலாக வாகனங்களை ஆஃப் செய்து பிராங்க் செய்வதாக கூறி, பயணிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரத்தை மிக தீவிரமாக எடுத்து கொண்ட ஒன்றிய அரசு, இதற்காக பயன்படுத்தப்படும் மூன்று சீன செயலிகளை அதிரடியாக தடை செய்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “நாட்டில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை தொலைதூரத்திலிருந்தே செயலிழக்க செய்ய தவறாக பயன்படுத்தப்பட்ட BAT-BMS, Lossigy, Epoch-i-ion ஆகிய மூன்று சீன செயலிகளை மொபைல் ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கி உத்தரவிடப்படுகிறது. இதேபோன்று தவறாக பயன்படுத்தப்படும் வேறேதேனும் செயலிகள் இருந்தால் அவையும் முடக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
