நாமக்கல், ஜூலை 2: உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு, புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50 ஆயிரம் வழங்க, தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30ம் தேதியாக இருந்தது. தற்போது, இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இரு வாகனத்திற்கான மானியம் பெற, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே, பயனாளிகள் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 15ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
