ராசிபுரம், ஜூலை 1: ராசிபுரம் அருகே திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து போலீசாருக்கு கறி விருந்து பரிமாறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் ஸ்டேசனுக்குட்பட்ட பட்டணம் பகுதியில் சமீபத்தில், தனியாக வீட்டில் இருந்த பெண்ணை நோட்டமிட்டு, துப்பாக்கி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தவித தடயமும் சிக்காமல் இருக்க, பல்வேறு வகையிலான யுக்திகளை கையாண்டு உள்ளனர். குறிப்பாக சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதியாக வந்து சென்றுள்ளனர். முகமூடி, கையுறை, துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியவர்கள், ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் எந்தவித சம்பவத்திலும் ஈடுபடவில்லை. அதே வேளையில் போலீசாருக்கு எந்தவிதமான தடயமும் சிக்கி விடக்கூடாது என நேர்த்தியாக வந்து சென்றனர். குறிப்பாக செல்போன் பயன்படுத்தாதது போலீசாருக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பல்வேறு கோணங்களின் அடிப்படையில், அந்த பகுதியில் இயங்கிய ஹலோ பிரிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி இடைநின்ற நபர்கள் குறித்து விசாரணை செய்து, அதன் வாயிலாக குற்றவாளியை கைது செய்தனர்.இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்றினர். அனைவரும் ஒன்று சேர்ந்து, விரைவாக குற்றவாளிகளை கைது செய்த காரணத்தினால், தற்போது ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய அனைத்து ேபாலீசார் மற்றும் எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்களுக்கு, டிஎஸ்பி தலைமையில் தனியாக கறி சமைத்து, ஒரு ஹாலில் அனைத்து போலீசாருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
