கணவன் இறந்து 3 மாதமே ஆன நிலையில் நள்ளிரவில் அத்துமீறிய மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகள்: பல்லாவரம் அருகே பரபரப்பு

சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில், பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை, மருமகள் அரிவாள்மனையால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கஸ்தூரிபாய் நகர், 4வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (58), அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் மணிகண்டன் (32). இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனா (28) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தம்பதிக்கு ஈஸ்வரி (8) என்ற மகளும், சரண் (4) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் செய்வதறியாது தவித்த மீனா, கணவர் இறந்த பின்னரும் கூட, தொடர்ந்து மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பெருமாள், மருமகளிடம் அடிக்கடி அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து மீனா எத்தனையோ முறை எச்சரித்தும் கூட, பெருமாள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மருமகளிடம் அத்துமீற முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் மீனா தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, நைசாக அருகில் சென்ற பெருமாள், தனது ஆசைக்கு இணங்குமாறு மீனாவை வற்புறுத்தியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மீனா, அவரை எச்சரித்து வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார்.

ஆனால், பெருமாள் தொடர்ந்து அத்துமீற முயன்றுள்ளார். இதனால், வீட்டின் சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்க பயன்படுத்தும் அரிவாள்மனையை எடுத்து வந்த மீனா, பெருமாளின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். இதில், படுகாயமடைந்த பெருமாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த பெருமாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனாவை கைது செய்து, உண்மையிலேயே தன்னிடம் தவறாக நடக்க முயன்றதன் காரணமாக மாமனாரை கொலை செய்தாரா அல்லது அவர்களுக்குள் ஏதேனும் சொத்து தகராறு காரணமாக கொலை செய்தாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னிடம் தவறாக நடக்க முயன்ற மாமனாரை, மருமகளே கொடூரமாக அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: