ஊதிய உயர்வு நிலுவை தொகை பெற ரூ.30,000 லஞ்சம் மாவட்ட கல்வி அதிகாரி கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் புகழேந்தி (55). இவர், முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். திருச்சி மாவட்ட கல்வி அலுவலராகவும் (பொ) பணியாற்றி வருகிறார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தம்பதியர் ஆண்டு ஊதிய உயர்வு நிலுவை தொகை கடந்த 2020 முதல் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க புகழேந்தியை நாடி உள்ளனர்.

அதற்கு அவர் ரூ.30,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி ஆசிரியர், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். பின்னர் ரசாயனம் தடவிய ரூ.30ஆயிரத்துடன் ஆசிரியர், நேற்று இரவு திருச்சி பழைய கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள அலுவலகம் சென்று புகழேந்தியிடம் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் புகழேந்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories: