கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் எம்எல்ஏ ரிதாப்ரதா தலைமையில் 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்று விட்டனர். 20 எம்பிக்களும் அந்த அதிருப்தி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பேரவை எதிர்க்கட்சி தலைவராக அதிருப்தியாளர்கள் அணியை சேர்ந்த ரிதாப்ரதா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிருப்தி அணியினர் மீது மம்தா அணியினர் நான்கு காவல் நிலையங்களில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
கொல்கத்தாவின் காளிகாட், பிரகதி மைதான் மற்றும் பிதான்நகர் பகுதியிலுள்ள நியூ டவுன் மற்றும் பிதான்நகர் சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையங்களில் மம்தா அணி ஆதரவாளரும், திரிணாமுல் கட்சியின் தேசிய இணை செயலாளருமான டோலா சென் அளித்துள்ள புகாரில், “அதிருப்தி அணியினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் அமைப்பு ரீதியான பதவிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி, தொண்டர்கள் ஆதரவாளர்களை தவறாக வழி நடத்துகின்றனர். கட்சியின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகின்றனர். அதிருப்தி இயக்கத்தின் பின்னணியில் செயல்படுவோர் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
