மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆனி மாத சனி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் நகரில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் 29வது தலமாகவும், சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்று சிறப்பு வாய்ந்த கோவிலாக திகழ்ந்து வருகிறது.
இத்திருக்கோயிலில் ஆனி மாதம் சனி பிரதோஷ தினமான நேற்று நந்தியம் பெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், உள்ளிட்ட 15 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்கள் ஒலிக்க சங்கொலி முழங்க மகா தீபாரதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து, நந்தி வாகனத்தில் சுவாமியும் அம்மனும் கோயிலின் உட்பிரகாரத்தில் பக்தர்கள் படைசூழ வலம் வந்து அருள் பாலித்தனர். மேலும், கோயில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
