பூந்தமல்லி, ஜூன் 25: புதிதாக திறந்த கடையில் பிரியாணி வாங்குவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட அடிதடி மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய பிரியாணி கடை திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சலுகையாக இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், காலை முதலே நீண்ட வரிசையில் அசைவ பிரியர்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரியாணி வாங்குவதற்காக அங்கு வந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. 10க்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் மாறி, மாறி கைகளாலும், கற்களையும் வீசி தாக்கி கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினர் மாறி மாறி தாக்கி கொண்டதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த அடிதடி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதன் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் அந்த காட்சிகளை வைத்து மோதலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் எதற்காக இரு தரப்பினர் மோதிக் கொண்டனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
