ஊத்துக்கோட்டை, ஜூன் 18: பாலேஸ்வரத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் நீர் நிரம்பியதும், ஆரணியாற்றுக்கு உபரிநீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கும் தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும். அதை தடுப்பதற்கு பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த 2007ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. அன்று முதல் தடுப்பனையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அந்த தண்ணீர் விவசாயத்திற்காக ராள்ளபாடி வழியாக சின்னம்பேடு ஏரிக்கு செல்லும். இதனால், பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்றனர். இந்நிலையில், மழை பெய்து போதுமான தண்ணீர் இல்லாததால் தற்போது பாலேஸ்வரம் தடுப்பணை வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
