பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் மின்விளக்குகள் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் இருளப்பாளையம், உட்கோட்டை வழியாக நேமம், படூர் போன்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரவு நேரத்தில் பள்ளி, கல்லூரிகளின் மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் அவ்வழியாக செல்லும்போது, மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மின் விளக்குகள் அமைத்து தர வலியுறுத்தி, கிராம மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
