வீட்டு வேலைக்காக பக்ரீன் சென்ற மனைவி உயிருக்கு ஆபத்து

*திருப்பூர் டிரைவர் கலெக்டரிடம் கண்ணீருடன் மனு

பெரம்பலூர் : திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (51). மனைவியின் சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா வாலிகண்டபுரத்தில் தற்போது வசித்து வரும் இவர், நேற்று (12ம்தேதி) பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் கண்ணீருடன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எங்களுக்கு ஒருமகள், ஒருமகன் உள்ளனர்.

திருப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி கௌரியை (45) வெளி நாடு அனுப்புவதற்காக வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த முபாரக், பாத்திமா, சலீம் மூவரும் சேர்ந்து பக்ரீன் நாட்டில் வீட்டு வேலைக்காக அனுப்பி வைப்பதாகவும், அதற்காக பணம் தேவையில்லை, பக்ரீன்நாட்டில் ஒரு வீட்டில் வேலைக்காக மாத சம்பளம் ரூ.30 ஆயிரமும், உணவும், தங்குவதற்கு இடமும் தருவதாக உறுதி அளித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கேரளா மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து பக்ரீன்நாட்டுக்கு அனுப்பி வைத்தோம். ஆரம்பத்தில் ஒரு வீட்டில் மட்டும் வேலை செய்து வந்த நிலையில், ஒரே வாரத்தில் 3 வீட்டு வேலைகளை செய்ய சொல்லியும், உணவு தராமலும் அரபியின் மனைவி துன்புறுத்துகிறார். இதனால் உடல் சோர்வடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போனில் பேசிய போது தெரிய வந்தது.

வெளி நாட்டுக்கு அனுப்பியவர்களிடம் கேட்ட போது, வெளிநாட்டு வேலை என்றால் அப்படி தான் இருக்கும், இஷ்டம் இருந்தால் செய்யுங்கள், இல்லையென்றால் ரூ.2 லட்சத்து, 25 ஆயிரம் தந்தால், உங்கள் மனைவியை அனுப்பி வைக்க சொல்கிறோம் என்று கூறினர்.

உணவு தராமல் சித்ரவதை செய்வதால் உயிருக்கு போராடும் எனது மனைவியை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

The post வீட்டு வேலைக்காக பக்ரீன் சென்ற மனைவி உயிருக்கு ஆபத்து appeared first on Dinakaran.

Related Stories: