கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு குளிரின் தாக்கம் தாமதமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக டிசம்பரில் தொடங்கி ஜனவரி முடியும் வரை இந்த உறை பனி சீசன் காலம் தொடரும். ஆனால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் தற்போது வரை இந்த உரை பணி சீசன் இல்லாமல் இருந்தது. தற்போது தான் மிக கால தாமதமாக இந்த உறை பனி சீசன் தொடங்கியுள்ளது. வழக்கத்தைவிட இந்தாண்டு பருவமழை அதிகளவு அளவு பெய்ததால் நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொடைக்கானலில் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனி கொட்ட துவங்கி உள்ளது. ஏரிப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பல இடங்களில் தற்போது வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் காட்சியளிக்கிறது. மேலும், கொடைக்கானலில் தற்பொழுது நிலவும் இந்த உறைபனி தாக்கத்தால் ஏரியில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் வெயில் வந்தபிறகே நடைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஏரிப்பகுதி சிறு வியாபாரிகள் கடைகளை தாமதமாகவே திறந்து வருகின்றனர். இந்த உறை பனி தாமதமாக துவங்கினாலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குளிர் அதிகரித்துள்ளதால் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் இதை கண்டு ரசித்து வருகின்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
கொடைக்கானலில் தற்போது நிலவிவரும் இந்த கடும் குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கொடைக்கானல் உள்ளூர் மக்கள் காலையில் இந்த பனி காரணமாக தாமதமாகவே தங்களது பணிகளை துவக்கி வருகின்றனர். அதுபோல மாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் விரைவில் தங்களது பணிகளை முடித்து விடுகின்றனர். இந்த கடுமையான பனி காரணமாக கொடைக்கானலில் உள்ள வயதானவர்கள் மற்றும் சளி தொந்தரவு உள்ளவர்கள் வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர். தொடர்ந்து கொடைக்கானலில் இருந்தால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இதுபோன்று வெளியூர்களுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. கொடைக்கானல் வாசிகள் பகல் பொழுதில் இருந்து கம்பளி ஆடைகள், ஜெர்கின், ஸ்வெட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இதுபோல இரவு நேரங்களில் வீடுகளில் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தியும், இரவில் படுக்கையில் கம்பளிகளை கூடுதலாக பயன்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். பனியின் தாக்கத்தால் கோல்டு கிரீம் உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். கொடைக்கானலில் தற்போது நிலவிவரும் இந்த கடுமையான குளிரால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். கொடைக்கானலில் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. மேல் மலைப்பகுதிகளில் வெள்ளைப்பூண்டு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த கடுமையான குளிர் காரணமாக இந்த பயிர்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
The post தாமதமாக தொடங்கிய உறைபனி சீசன்… கொடைக்கானலில் பொழியும் வெள்ளை மழை: கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.