விஜயதரணி கெஞ்சி கூத்தாடி பாஜவில் சேர்ந்துவிட்டார்: விஜய் வசந்த் எம்.பி, ராஜ்குமார் எம்எல்ஏ தாக்கு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மேலிட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ, விஜய் வசந்த் எம்பி ஆகியோர் மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: விஜயதரணி எம்எல்ஏ பாஜவில் சேருவதாக ஒரு மாதமாக கதை பேசப்பட்டு வந்தது. சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. கட்சிப் பணிகளும் செய்யவில்லை. திட்டமிட்டு அவர் செயல்பட்டு உள்ளார். கெஞ்சி கூத்தாடி தான் பாஜவில் சேர்ந்துள்ளார். இவர் எந்த கட்சிக்கு போனாலும் இதே நிலைமைதான் தொடரும். விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்ததோடு அவமானபடுத்தி விட்டார். இவர் செய்தது நாகரிகமான செயல் இல்லை. எம்பி சீட் கொடுக்கவில்லை என சேர்ந்துள்ளார்.

3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவருக்கு அடையாளத்தை காட்டிக் கொடுத்ததே காங்கிரஸ் கட்சி. இவரது எம்எல்ஏ பதவி கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் பறிக்கப்படும். விஜயதரணிக்கு தைரியம் இருந்தால் இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் பாஜ சார்பில் நிற்கட்டும். களத்தை சந்திப்போம். 12 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து இந்த தொகுதி பக்கம் வரவில்லை, மக்கள் பணி செய்யவில்லை என்ற புகார் எங்களுக்கு தெரியவந்தது. நான் மேல் இடத்திற்கு தகவல் கொடுத்துள்ளேன். கடந்த முறை இவர் பெண் என்பதால் சீட் கொடுக்கப்பட்டது. கட்சியில் இவருக்கு அகில இந்திய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post விஜயதரணி கெஞ்சி கூத்தாடி பாஜவில் சேர்ந்துவிட்டார்: விஜய் வசந்த் எம்.பி, ராஜ்குமார் எம்எல்ஏ தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: