சத்தியமங்கலம் : பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் மூடப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என மத வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலின் முகப்பு நுழைவுவாயில் மூடப்பட்டு அதில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதாகை ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலில் ஆகம விதிகளின்படி, அம்மனுக்கு நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பக்தர்கள் சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டதால் பண்ணாரி அம்மன் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக கோயில் வளாகத்தில் உள்ள தேங்காய், பழம், பூஜை பொருட்கள் விற்பனை கடை, பிரசாத பொருட்கள் மற்றும் புகைப்பட விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளன.