தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து வைத்தது ஏன்?: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையின் நகல் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தனது புகார் மனு குறித்து எந்த ஒரு பதிவும் இல்லை என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் ஹென்றி திபேன் அளித்த புகார் குறித்த பதிவு இடம்பெறாதது ஏன்?. அவர் தரப்பு வாதத்தை கேட்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இது குறித்து ேதசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து வைத்தது ஏன்?: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: